×

தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப அரசு முடிவு பட்டியல் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

வேலூர், நவ.19:அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பும் வகையில் தகுதியானவர்களின் பட்டியலை முதன்மை கல்வி அலுவலர்களிடம் பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் பெரும்பாலானவர்கள் உரிமைவிடல் செய்து விட்டதால் காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளன. பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியான முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து திருத்தங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும். மேலும் பட்டியலில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெற தகுதியானவர்களா என்பதையும், ஒழுங்கு நடவடிக்கை எதுவும் நிலுவையில் உள்ளதா என்பது போன்ற விவரங்களையும் பரிசீலனை செய்து பரிந்துரை செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதற்கிடையில் சமீபத்தில் நடந்த பதவி உயர்வுக்கான கலந்தாய்வு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Tags :
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...