கோவில்பட்டி, நவ. 19: கோவில்பட்டியில் மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்தினர். கோவில்பட்டி நகரில் உள்ள எட்டயபுரம் மெயின்ரோடு, மங்கள விநாயகர் கோயில் சந்திப்பில் இருந்து மந்தித்தோப்பு வரை பிரதான சாலை செல்கிறது. இந்த சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை பலமுறை அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்தினர். மேலும் மந்தித்தோப்பு பிரதான சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி இன்று (19ம் தேதி) மதியம் 3 மணியளவில் இதே சாலையில் நடைபெறும் மனிதசங்கிலி போராட்டம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை மார்க்சிஸ்ட் கட்சியினர் வழங்கினர். இதில் மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, நகர செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், நகரக்குழு உறுப்பினர் சக்திவேல்முருகன், மாவட்ட குழு உறுப்பினர் விஜயலட்சுமி, அனைத்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த நாராயணசாமி, மந்தித்தோப்பு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் முத்துராஜ், நகரக்குழு உறுப்பினர் அந்தோணிசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.