திருவள்ளூர், நவ. 19: திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் தர்ம சாஸ்தா சேவா சங்கம் சார்பில், 24ம் ஆண்டு திருவிளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற்றது. திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் ஊராட்சியில் உள்ளது ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீசோளீஸ்வரர் கோயில். இக்கோயில் வளாகத்தில் உள்ளது தர்ம சாஸ்தா கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.24ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 8 மணிக்கு பால் அபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்ததுமாலை 5 மணிக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க 108 விளக்குகளுடன் பெண்கள் ஊர்வலமாக வந்து சோளீஸ்வரர் கோயிலை வந்தடைந்தனர். இரவு 7 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து வீதியுலா நடைபெற்றது. இரவு 10 மணிக்கு படி பூஜை, விஷேச தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு கற்பூர ஜோதி தரிசனமும் நடந்தது.