மதுராந்தகம், நவ.19: மதுராந்தகம் நகராட்சி மாம்பாக்கம் காட்டு காலனி சாலையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியமாக போக்குவரத்துக்கு லயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது. இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.மதுராந்தகம் நகராட்சி 23வது வார்டு மாம்பாக்கம் பகுதியில் உள்ள காட்டு காலனியில் சுமார் 300 பேர் கொண்ட 80 குடும்பங்கள் உள்ளன. இவர்களது போக்குவரத்துக்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் வீராணம் குடிநீர் திட்ட பைப்லைன் அமைக்கப்பட்டுள்ள பகுதியை ஒட்டி சாலை அமைந்துள்ளது.இந்த சாலை, ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலையாக அமைத்து, முறையாக பராமரிக்காததால், தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறிவிட்டது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் லாயக்கற்ற நிலையில் உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கடும் சிரமம் அடைகின்றனர்.
குறிப்பாக, பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்கள் டயர்களில் குத்தி பஞ்சராகிறது.காட்டு காலனி மக்களின் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், வயல்வெளிகளில் விவசாய பணிகள் நிமித்தமாக செல்லவும் இந்த சாலை அமைந்துள்ளது. இதனால், காட்டு காலனி பகுதி மக்கள் மட்டுமின்றி மாம்பாக்கம் பகுதி மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மேலும், காட்டு காலனியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி, மதுராந்தகம் நகரத்துக்கு செல்கின்றனர். அவர்கள் சைக்கிள்களில் வரும்போது, ஜல்லிக்கற்களில் சிக்கி கீழே விழுந்து படுகாயமடையும் சம்பவம் தினமும் அறங்கேறுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், மேற்கண்ட சாையை ஆய்வு செய்து, உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.