தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் காவலர்களுக்கு ஓய்வறை திறப்பு

தண்டையார்பேட்டை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள் வீட்டிற்கும், அவர்கள் பணிபுரியும் காவல் நிலையத்திற்கும் அதிக தூரம் இருப்பதால் ஓய்வு இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதேபோல், வெளியூர்களில்  இருந்து சென்னை வரும் காவலர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லாமல் தவித்து வந்தனர். எனவே, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், காவலர்களுக்கு  நவீன  ஓய்வறை கட்டப்படும், என அறிவித்தார். அதன்பேரில், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஆர்கே நகர், கொருக்குப்பேட்டை புதுவண்ணாரப்பேட்டை,  திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் ஓய்வு எடுக்கும் வகையில், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ₹5 லட்சம் செலவில் நவீன காவல் ஓய்வு அறை கட்டப்பட்டது.

இந்த நவீன ஓய்வறையில் குளிர்சாதன வசதி, கட்டில்கள், காவலர்கள் அமர்ந்து உண்ணும் வகையில் மேசைகளும், டிவி,  நவீன கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.  மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் திறந்து வைத்தார். உடன் இணை  ஆணையாளர் கபில் சராட்கர், துணை ஆணையாளர் சுப்புலட்சுமி மற்றும்  வண்ணாரப்பேட்டை சரகத்திற்குட்பட்ட  உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், உதவி  ஆய்வாளர்கள், காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: