சென்னை: சென்னை திருமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, 7 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த காமராஜ் (39) என்பதும், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, சென்னையில் பல இடங்களில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பெரம்பூர்: புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு கன்னிகாபுரம் விளையாட்டு திடல் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.