பைக் மீது பள்ளி பேருந்து மோதி விபத்து 2 மாணவர்கள் உடல் நசுங்கி பலி : தாம்பரம் அருகே பரிதாபம்

தாம்பரம்: தாம்பரம் அருகே ஒரே பைக்கில் சென்ற 3 மாணவர்கள், மாடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த தனியார் பள்ளி பேருந்து மோதியதில் இருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கிழக்கு தாம்பரம், ஐஏஎப். சாலையை சேர்ந்தவர் பிரசாந்த் (20). இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும், கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களான ஜனா (எ) ஜெகந்நாதன்(18) மற்றும் அகரம்தென் கோகுலம் நகரை சேர்ந்த தினேஷ்குமார் (18) ஆகியோரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் நண்பர்கள் மூன்று பேரும் ஒன்றாகவே செல்வது வழக்கம். அதுபோல், நேற்று மாலையும் நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து, பிரசாந்த்தின் பைக்கில், சேலையூரில் இருந்து அகரம்தென் செல்லும் சாலையில் தாம்பரம் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

எம்ஜிஆர் நகர் அருகே சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே  மாடு ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. மாடு மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது, நிலை தடுமாறிய மாணவர்கள் பைக்குடன் கீழே விழுந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளி மாணவன் தினேஷ்குமார் மற்றும் கல்லூரி மாணவன் பிரசாந்த் மீது மோதியது. இதில், இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு பள்ளி மாணவன் ஜெகந்நாதன் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்த மாணவர்கள் இருவரது சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனரான காஞ்சிபுரம் மாவட்டம், நல்லம்பாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை  என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் என இரண்டு பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: