யூரியா தட்டுப்பாடு வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம்

கும்பகோணம், நவ. 14: திருப்பனந்தாள் வட்டாரத்தில் யூரியா தட்டுப்பாடு என்ற பொய்யான தகவல், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் வட்டாரத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 12,000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை வளர்ச்சி பருவத்தில் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் மேலுரம் இடும் தருணத்தில் ஏக்கருக்கு 25 கிலோ யூரியா, 15 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பனந்தாள் வட்டாரத்தில் உள்ள முக்கிய வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இப்கோ, இந்தியன் பொட்டாஷ் நிறுவனங்களின் வேம்பு கலந்த யூரியா, பொட்டாஷ், டிஏபி ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் யூரியாவின் விற்பனை விலை மற்றும் இருப்பு விபரங்களை சரிபார்க்க கடந்த இருநாட்களாக வேளாண்துறையின் அனைத்து அலுவலர்களும் கள ஆய்வு செய்து வருகின்றனர்.

திருப்பனந்தாள் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் திருப்பனந்தாள் வேளாண்மை உதவி இயக்குனர் பாலசரஸ்வதி மற்றும் வேளாண் அலுவலர் கார்த்திகேயன், வேளாண் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது உரங்களின் கையிருப்பு, பட்டியலிடப்பட்ட விபரம், பாயிண்ட ஆப் சேல் மெஷினில் உள்ள இருப்பு விபரம் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் திருப்பனந்தாள் வேளாண்மை உதவி இயக்குனர் பாலசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் தாங்கள் வழக்கமாக உரம் வாங்கும் இடத்தில் உரம் கிடைக்கவில்லை என்றால் அந்த நிறுவனத்தின் தலைவர், உரிமையாளர் என்ன சொல்கிறார் என கேட்டு ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் உரம் கிடைத்து விடும் என்றால் அவருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு பெற்று கொள்ள வேண்டும்.

உரம் கிடைக்க வாய்ப்பில்லை அல்லது தனக்கு தெரியவில்லை என்று தலைவர், உரிமையாளர் கூறினால் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர், வேளாண் அலுவலர், வேளாண்மை உதவி இயக்குனர் ஆகிய ஒருவருக்கு தகவல் தெரிவித்து உண்மையான வரத்து மற்றும் இருப்பு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். பொய்யான தகவல், வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோரை பற்றிய தகவல்களை வேளாண்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம். சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து பரப்பளவிற்கும் தேவையான உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: