மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் தாய் கொலை மகனால் தாக்கப்பட்டு காயமடைந்த தந்தையும் சிகிச்சை பலனின்றி சாவு

திருச்சி, நவ. 14: மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் மகன் தாயை அடித்துக் கொன்றபோது தடுத்ததால் தாக்கப்பட்டு காயமடைந்த தந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.திருச்சி பொன்மலை கணேசபுரம் 9வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(50), மாநகராட்சி துப்புரவு தொழிலாளி. இவரது மனைவி பாப்பாத்தி (45). இவர் திருவெறும்பூர் கைலாஷ்நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் பிரகாஷ்(30) என்ற மகன் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் கரூரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன் பிரகாஷ்க்கும் திண்டுக்கல் மாவட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணிற்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. இதில் திருமண அழைப்பிதழில் பாப்பாத்தியின் தங்கையின் பெயரை பெண் வீட்டார் சேர்க்கவில்ைல என்பதால் மருமகள் குடும்பத்தினர் மீது கோபத்தில் இருந்தார். இதனால் அடிக்கடி மாமியாருக்கும் மருமகளுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கடந்த 2ம் தேதி மீண்டும் மாமியார் மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், மனைவி வெண்ணிலாவை அழைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் சென்றுவிட்டு நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்கு வந்தார்.

அப்போது தாய்க்கும் மகனுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், அருகில் இருந்த இரும்பு ராடால் தாய் பாப்பாத்தி தலையில் தாக்கினார். இதில் அலறியவாறு பாப்பாத்தி கீழே சரிந்தார். இவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த தந்தை ஆறுமுகத்தின் தலையில் ஓங்கி அடித்தார். இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தனர். இதையடுத்து அதிகாலை பைக்கை எடுத்துக்கொண்டு சென்ற பிரகாஷை அவ்வழியே ரோந்து பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ சபியுதீன், பைக்கை மறித்து நிறுத்தினார். இந்த நேரத்தில் எங்கே செல்கிறாய் என விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறினார். இதனால் திடுக்கிட்ட எஸ்எஸ்ஐ, வீட்டிற்கு சென்று பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.இதையடுத்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாப்பாத்தி இறந்தார். தந்தை ஆறுமுகத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் பிரகாஷை கைது செய்த இன்ஸ்பெக்டர் ரமேஷ், வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார். இதில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ஆறுமுகம் இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: