ஓமலூர், நவ.14: ஓமலூர் அருகே சுரங்கப்பாலம் வெள்ளக்காடானதால், 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஓமலூர் அருகே சாமிநாயக்கன்பட்டி கிராமத்தின் வழியாக, சேலம் -மேட்டூர் மார்க்கமாக செல்லும் ரயில்வே இருப்புப்பாதை உள்ளது. இந்த வழியாக மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் ரயில்கள் அடிக்கடி வந்து செல்கின்றன. கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு, சுரங்கப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது தரைப்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் சுரங்கப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால், அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.