×

மழை காலங்களில் நோய் தாக்குவதால் நீர்ச்சத்து காய்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்

தொண்டி, நவ. 14:  மழைக்கால நோய்களை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது, வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக திடீர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பகுதியில் உள்ளவர்களுக்கு திடீர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சளி போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து டாக்டர்கள் கூறியதாவது, ‘மழைகாலங்களில் குடிநீரை நன்கு காய்ச்சிய பிறகே குடிக்க வேண்டும். முடிந்தவரை மழையில் நனையாமல் இருக்கும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும். சுகாதாரமான ஆடைகளை அணிய வேண்டும். சூடான உணவுகளையே உட்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

அசைவத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். அக்கி, அம்மை நோய் பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். நீர்க்காய்கறிகளான சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, கேரட், பீட்ரூட், முருங்கைக் கீரை, பொன்னாங்கன்னி, தண்டங்கீரை, பசலைக் கீரை போன்றவற்றை பயன்படுத்தலாம். கம்பு, கேழ்வரகு போன்ற முளைகட்டிய தானிய வகைகளை உட்கொள்ளலாம். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மழை காலங்களில் கொசுக்களினால்தான் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதனை விரட்ட காயில்களை பயன்படுத்தினால் உடல்நலக்கேடுதான் ஏற்படும். எனவே, கொசுவை விரட்ட வேப்பிலையில் புகை ஏற்படுத்தி பயன்படுத்தலாம். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பயன்படுத்தாமல் போட்டுள்ள பொருட்களில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வெளியே சென்று வந்தால் காலை, மாலை என 2 வேலைகளிலும் குளிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்..

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை