திருப்பூர், நவ.14: தமிழகத்தில் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடஒதுக்கீடு பட்டியலைத் தாமதமின்றி, உடனடியாக வெளியிடுமாறு தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிசம்பர் மாத இறுதிக்குள்ளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்த தேர்தல் தொடர்பான பணிகளில் அரசு நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் விருப்ப மனுக்களை தங்கள் கட்சியினரிடம் ஆளும் கட்சி பெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள், பட்டியலினத்தினர் போட்டியிடுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளாட்சி இடங்கள் விபரம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாமல் இருக்கிறது.