×

கண்டியன் கோவில் கிராமத்தில் குட்டை அமைக்கும் பணி

திருப்பூர், நவ 14: திருப்பூர் தெற்கு வட்டம், கண்டியன் கோவில் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் புதிய குட்டை அமைக்கும் பணியினை  மாவட்ட  கலெக்டர் நேற்று துவக்கி வைத்தார். திருப்பூர் தெற்கு  வட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், கண்டியன் கோவில் ஊராட்சிக்குட்பட்ட அம்மாபாளையத்தில்  ஊர் பொதுமக்கள் சார்பில் புதிய குட்டை அமைக்கும் பணியினை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘திருப்பூர் மாவட்டத்தில், விவசாயகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் சார்பிலும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பிலும், குடிமராமத்துப் பணிகள் மற்றும் நீர்நிலைகள் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மழை காலத்தில், தண்ணீரை முழுமையாக சேமிக்க முடிகிறது.

மேலும், மாவட்டத்திலுள்ள தன்னார்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பில் குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வாரி மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கண்டியன்கோவில் கிராமத்தில், அமைந்துள்ள சுமார் 4 ஏக்கர் பரப்பளவிலான அம்மாபாளையம் குட்டை ஊர் பொதுமக்கள் சார்பில் புதிய குட்டையினை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இக்குளத்தினை அமைப்பதன் மூலம் மழைக்காலங்களில் நீரை சேமித்து இக்குளத்தினை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. மேலும், விவசாய மக்களுக்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்கள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை விவசாய பெருங்குடி மக்கள் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Tags : temple village ,Kandian ,
× RELATED தஞ்சை பசுபதி கோயில் கிராமத்தில்...