ஈரோடு, நவ.14: புலிகள் காப்பகம் என்ற பெயரில் மலைவாழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த புலிகள் காப்பக கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு கூட்டம் தாளவாடியில் நேற்று முன்தினம் நடந்தது. தலமலை முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகி மோகன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கொங்கல்லி, ராமர்பாதம், கருவண்ணராயர், தொட்டகோம்பை, மாவநத்தம் ஆலமலை, கெஜலட்டி தர்க்கா உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் மக்கள் காலம் காலமாக நடத்திவரும் வழிபாட்டினை புலிகள் காப்பகம் என்ற பெயரில் தடுக்க கூடாது. வனச்சாலைகளில் செல்லும் உள்ளூர்- வெளியூர் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கக்கூடாது. வனப்பகுதிக்குள் கால்நடை மேய்ச்சலை தடுக்கக்கூடாது. வனப்பொருட்களை சேகரிக்கும் பழங்குடிகளின் பாரம்பரிய உரிமைகளை பறிக்கக்கூடாது.