கோவில்பட்டி, நவ.14: கோவில்பட்டி அருகே ஓணமாக்குளத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. முகாமில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பொதுமக்களிமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். மேலும் 88 பயனாளிகளுக்கு ரூ.15.66 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளவும், மக்களின் குறைகளை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தீர்க்கும் வகையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி கோவில்பட்டி அருகே ஓணமாக்குளத்தில் முன்னோடி முகாம் நடத்தப்பட்டு 113 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 45 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது. நிகழ்ச்சியில் வருவாய் துறையின் மூலம் 59 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 21 பேருக்கு முதியோர் ஓய்வூதியம், வேளாண்மைத்துறை மூலம் 4 நபர்களுக்கும், தோட்டக்கலைத்துறை மூலம் 4 நபர்களுக்கும் என 88 நபர்களுக்கு ரூ.15.66 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.