கோவில்பட்டி, நவ.14: கோவில்பட்டி அருகே எஸ்.குமரெட்டியாபுரம் வழியாக சோலார் நிறுவன கனரக வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தக்கோரி கிராம மக்கள் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.கோவில்பட்டி அருகே கடம்பூரில் இருந்து பசுவந்தனை இடையே அமைந்துள்ள தென்னம்பட்டி, ஓனமாக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் சுமார் 800 ஏக்கரில் தனியார் நிறுவனம் சார்பில் சேலார் மின்உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான உதிரிபாகங்கள் வடமாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.இந்த கனரக வாகனங்கள் தினமும் கோவில்பட்டி அருகே எஸ்.குமரெட்டியாபுரம் கிராமம் செல்லும் பஞ்சாயத்து சாலை வழியாக செல்கின்றன. மிகவும் குறுகலான இந்த கிராம சாலை வழியாக அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் செல்வதால் இச்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது விபத்தில் சிக்குகின்றனர்.