×

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் கணினி ஆய்வகத்தை பயன்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை, நவ. 14: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கணினி ஆய்வகத்தை பயன்படுத்தி திறன்களை பெறுவதற்கு தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதற்கு அடுத்த நிலையில் அருகில் உள்ள நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி என்ற வரிசையில் கல்வியை தொடரும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. ஆனால் உயர்நிலை, மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கண்காணிப்பு, வழிகாட்டுதல் இருந்தால் தொடக்கப் பள்ளியில்  இருந்து நல்ல தரமான கல்வியை வழங்க முடியும். மேலும், மாணவர்கள் கல்வியில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த வழி ஏற்படும். உயர்நிலை, மேனிலை வகுப்புகளில் மாநில அளவில் நடக்கும் மாணவர்களின் தேர்ச்சி வீதம் சிறப்பாக அமையும்.

எனவே ஒன்றியங்களில் உயர்நிலை மேனிலைப் பள்ளி குறுவள மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை கண்காணிக்கும்  தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த வழி முறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,
 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வருகை, கற்பிக்கும் திறன் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.
 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் விடுப்பு எடுத்தாலோ, அவசர பணியால் வட்டார கல்வி அலுவலகம், வட்டார வள  மையம், பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளச் சென்றாலோ அந்த ஆசிரியர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உரிய வகையில் மாணவர்களுக்கு சென்று அடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
 பள்ளிகளில் உள்ள குறைகள் குறித்து உரிய கல்வி அலுவலர்களுக்கு புகாராக தெரியப்படுத்த வேண்டும். அந்த புகார் மீது இறுதி நடவடிக்கை அல்லது தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்த, உயர்நிலை, மேனிலை பள்ளிகளில் உள்ள அறிவியல்  ஆய்வக உபகரணங்களை பயன்படுத்த உரிய நடவடிக்கை மேள்கொள்ள வேண்டும்.
 மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகளை பயன்படுத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை வேண்டும்.
 மாணவர்களின் ஆர்வத்தையும் உடல் நலத்தையும் மேம்படுத்த உயர்நிலை, மேனிலை பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் விளையாட்டு வகுப்புகள் எடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்தி கல்வித் தரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
 உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை அனைத்து வகையான அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பயன்படுத்தி கணினி சார்ந்த திறன்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Middle Schools ,Computer Lab ,Head Teachers ,Directors ,School Education Department ,
× RELATED ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.10 லட்சம்...