×

பைப்லைன், குழாய்கள் உடைந்து போனதால் 2 ஆண்டுகளாக காட்சி பொருளாக இருக்கும் குடிநீர்

தொட்டி: தண்ணீருக்கு திண்டாடும் பொதுமக்கள்
மாமல்லபுரம், நவ.14: மாமல்லபுரம் பேரூராட்சி 11வது வார்டு, திருகுளம் தெருவில் குழாய் மற்றும் பைப்லைன் இல்லாததால், பயன்பாடின்றி குடிநீர் தொட்டி உள்ளது. இதனை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரம் பேரூராட்சி 11வது வார்டு,  திருகுளம் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டி அமைத்து, அதன் மூலம், பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அந்த குடிநீர் தொட்டியை பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், அதில் உள்ள குழாய்கள் மற்றும்  பைப் லைன் உடைந்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல், அப்பகுதியில் காட்சி பொருளாக இருக்கிறது.இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல், பல்வேறு பகுதிகளுக்கு சென்று, தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

இதனால், கடும் சிரமம் அடைகின்றனர். இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டும் காணாதது போல் மெத்தனமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.இதுகுறித்து அப்பகுபகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி சார்பில் ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதில் இருந்து பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.இந்த குடிநீர் தொட்டியை பேரூராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிக்கவில்லை. இதனல், கடந்த 2 வருடங்களாக அதில் தண்ணீர் பிடித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், தொட்டிக்கு தண்ணீர் செல்லும் பைப் லைன்கள் மற்றும் குழாய்கள் உடைந்துவிட்டன.இதனை சீரமைத்து தரும்படி பேருராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து, குழாய் மற்றும் பைப் லைன் பொறுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...