தாய் பால் கொடுக்கும் போது விபரீதம் 15 நாள் குழந்தை மூச்சுத்திணறி பலி: நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு

சென்னை: தாய் பால் கொடுக்கும் போது 15 நாள் பெண் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது. இந்த சம்பவம் நுங்கம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் சுந்தர் (29). இவருக்கு நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுதா (26) என்பவருடன் திருமணம் நடந்தது. சுந்தர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ்சில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை என்பதால் சுதா தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.சுதா நேற்று முன்தினம் மாலை தனது குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். அப்போது குழந்தை பசியின் காரணமாக அதிகளவில் தாய் பால் குடித்துள்ளது. இதனால் குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. புரை ஏறி மூக்கு வழியாக பால் வெளியேறியது. இதை பார்த்த சுதா அதிர்ச்சியடைந்து செய்வது அறியாமல் தவித்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதை கேட்டு சுதா மருத்துவமனை வளாகத்திலேயே தரையில் விழுந்து அழுது துடித்தார். இதனால் சிறிது நேரம் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: