சென்னை: நேருவின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அவரது உருவப் படத்திற்கு கவர்னர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான நேரு உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் மோதிலால் நேரு - சுவரூப ராணி அம்மையார் தம்பதியருக்கு 1889ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி மகனாகப் பிறந்தார். 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் நாள் இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்று, 1947ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை இந்தியாவை வழிநடத்தியவர். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், நவீன இந்தியாவின் சிற்பி எனவும் அழைக்கப்பட்டார்.