காரைக்கால், நவ. 13: காரைக்காலில் கலெக்டர் விக்ராந்த் ராஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. வேளாண் துறை கூடுதல் இயக்குநர் செந்தில்குமார் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காரைக்காலில் நம் நீர் என்ற திட்டத்தை கொண்டு குளங்களை தூர்வாரப்பட்டதற்காக விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் குளங்கள் தூர்வாரப்பட்டது போல் பல்வேறு பகுதியில் உள்ள கிணறுகளையும் தூர்வாரி பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். உரங்கள், யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வழங்கப்படும் யூரியா போதுமானது அல்ல. அடி உரம், பூச்சி மருந்துகளை அரசு மூலமாகவே வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை காலத்தோடு அதிகரிக்க வேண்டும்.