சேலம், நவ.13: தமிழக காவல்துறையில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்யும் பணி சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்து வருகிறது. கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை 3 நாட்களுக்கு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டநிலையில், அயோத்தி நில வழக்கு தீர்ப்பின் காரணமாக அடுத்தடுத்த நாட்கள் நடக்க இருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள 15 மையங்களிலும் வரும் 18ம் தேதி முதல் மீண்டும் தேர்வுகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் வரும் 18ம் தேதி உடல் தகுதி தேர்வு மீண்டும் நடக்கிறது. அன்றைய தினம் ஏற்கனவே கடந்த 9ம் தேதி பங்கேற்க வேண்டும் என அழைப்பாணை கொடுக்கப்பட்ட தேர்வர்கள் (பெண்கள்) கலந்துகொள்ள வேண்டும்.
அவர்களுக்கு காலை 6 மணி முதல் உடல் தகுதி தேர்வு நடக்கிறது. இரண்டாம் கட்ட தகுதி தேர்வான உடல் திறன் தேர்வில் கலந்துகொள்ளவுள்ள விண்ணப்பதாரர்கள், ஏற்கனவே 11ம் தேதி என குறிப்பிடப்பட்டவர்களுக்கு 19ம் தேதியும், 12ம் தேதி என குறிப்பிடப்பட்டவர்களுக்கு 20ம் தேதியும் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் தேர்வுகள் நடக்கவுள்ளது. இந்த தேர்வுகளுக்கு தனியாக புதிய அழைப்பு கடிதங்கள் அனுப்பப்படமாட்டாது. ஏற்கனவே உள்ள அழைப்பு கடிதத்துடன் சரியான தினத்தில் காலை 6 மணிக்குள் வந்து பங்கேற்க வேண்டும். மேலும் சந்தேகங்களுக்கு 0427-2272929 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.