ஒட்டன்சத்திரம், நவ. 13: ஒட்டன்சத்திரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் மக்கள்தொடர்பு முகாம் நடந்தது. சப்கலெக்டர் உமா, எம்எல்ஏ அர.சக்கரபாணி முன்னிலை வகித்தார். கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், ‘அரசின் திட்டங்கள் மூலம் பயன்களை பெறுவதற்கு தேவையான சான்றிதழ்களை பெறுவது தொடர்பாக, மனு அளிப்பவர்கள் கலெக்டர் அலுவலகம் சென்று அலையாமல், வீட்டில் இருந்தபடியும், இ-சேவை மையம் மூலமாகவும் பெறுவதற்கு அரசால் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் மனுக்களின் நிலை குறித்து குறுந்தகவல்கள் உள்ளிட்ட வசதிகள் மூலமாக எளிதில் அறிந்து கொள்ளலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் குறிப்பிட்ட அளவு நீர்மட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்கள் இல்லங்களில மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்’ என்றார்.