ஒட்டன்சத்திரம், நவ. 13: ஒட்டன்சத்திரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் மக்கள்தொடர்பு முகாம் நடந்தது. சப்கலெக்டர் உமா, எம்எல்ஏ அர.சக்கரபாணி முன்னிலை வகித்தார். கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், ‘அரசின் திட்டங்கள் மூலம் பயன்களை பெறுவதற்கு தேவையான சான்றிதழ்களை பெறுவது தொடர்பாக, மனு அளிப்பவர்கள் கலெக்டர் அலுவலகம் சென்று அலையாமல், வீட்டில் இருந்தபடியும், இ-சேவை மையம் மூலமாகவும் பெறுவதற்கு அரசால் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் மனுக்களின் நிலை குறித்து குறுந்தகவல்கள் உள்ளிட்ட வசதிகள் மூலமாக எளிதில் அறிந்து கொள்ளலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் குறிப்பிட்ட அளவு நீர்மட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்கள் இல்லங்களில மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து எம்எல்ஏ சக்கரபாணி தொகுதிக்கு தேவையான திட்டங்கள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும், விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் கிடைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் எடுத்துரைத்தார். முகாமில் 8 பேருக்கு தையல் இயந்திரம், 10 பேருக்கு தேய்ப்பு பெட்டிகள், 3 பேருக்கு விவசாய இடுபொருட்கள், 24 பேருக்கு குடும்ப அட்டை, 35 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 55 பேருக்கு முதியோர் உதவித்தொகை உட்பட 204 பயனாளிகளுக்கு ரூபாய் 12.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இதில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சரவணன், மண்டல துணை வட்டாட்சியர்கள் ராஜேந்திரன், ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.