வேலூர், நவ.13: விளையாட்டு வீரர்கள் நிறைந்த வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு அரங்கம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இதையடுத்து வேலூரில் காட்பாடி, ஓட்டேரி, விருதம்பட்டு உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சில காரணங்களுக்காக கைவிடப்பட்டன. இதற்கிடையில் மாவட்ட விளையாட்டு மைதானம் ஊசூரில் அமைப்பதற்காக ரூ16.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க இருந்தது. இதற்கிடையில் காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான 36.68 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்து, அதற்கான புதிய அரசாணை வெளியானது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட விளையாட்டு மைதானத்தின் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளரும், சென்னை மண்டல தலைமை பொறியாளருமான ராஜமோகன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பணிகள் விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.