சத்துணவு மைய காலி பணியிடங்களில் 25 சதவீதம் பதவி உயர்வு மூலம் நிரப்ப உத்தரவு

வேலூர், நவ.13: தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் காலி பணியிடங்களில் 25 சதவீதத்தை பதவி உயர்வு மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர்களுக்கான அனைத்து தகுதிகளும் பெற்றுள்ள சமையலர்கள் அப்பதவியில் 5 ஆண்டுகள் பணி முடித்திருந்தால் அமைப்பாளர்களாகவும், சமையல் உதவியாளர்களாக 10 ஆண்டுகள் பணி முடித்திருந்தாலோ அல்லது சமையலர் அல்லது சமையல் உதவியாளர் என இருபதவிகளிலும் 10 ஆண்டுகள் பணி முடித்திருந்தாலோ அவர்களுக்கு சத்துணவு அமைப்பாளர்களுக்கான காலி பணியிடங்களில் 25 சதவீத பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அனுமதிக்கப்பட்டுள்ள சமையலர் பணியிடங்களுக்கு சமையல் உதவியாளர்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்டது போக எஞ்சிய சமையலர் பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு சமையல் உதவியாளர்களுக்கான முதுநிலை பட்டியல் ஒன்று தயார் செய்து ஒருமுறை அலுவல் ஆக அரசாணை நிலை எண் 125 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள் 4.09.2019 வாயிலாக வெளியிடப்பட்டுள்ள கல்வித்தகுதியினை பின்பற்றி அனைத்து சமையல் உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். எஞ்சிய சமையல் உதவியாளர்களை காலிப்பணியிடம் ஏற்படும்போது முதுநிலை பட்டியலை  அடிப்படையாக கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இப்பணியினை வரும் டிசம்பர் 5ம் தேதிக்குள் முடித்து அதுதொடர்பான அறிக்கையை டிசம்பர் 10ம் தேதிக்குள் அரசிடம் சமர்ப்பிக்கவும் மாநில சமூக நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: