திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் 2வது நாளாக கிரிவலம்

திருவண்ணாமலை, நவ.13:  திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் நேற்று 2ம் நாளாக கிரிவலம் வந்தனர்.  திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  அதன்படி இந்தமாத (ஐப்பசி) பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தொடங்கி நேற்று இரவு 7.40 மணிக்கு நிறைவடைந்தது. பவுர்ணமி தொடங்கிய நேரத்திலிருந்து பக்தர்கள் கிரிவலம் வர ஆரம்பித்தனர். அதன்பின்னர் படிபடியாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரவு 9 மணியளவில் கிரிவல பாதை முழுவதும் பக்தர்களே காணப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய, விடிய பக்தர்கள்  கிரிவலம் வந்தனர்.

பவுர்ணமி நேற்று இரவு நிறைவடைந்ததையொட்டி, திருவண்ணாமலையில் 2வது நாளான நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பவுர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் கட்டண தரிசனம், பொது தரிசனம் வரிசையில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை வழிபட்டனர். வழக்கம் போல கோயிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

பக்தர்களின் வசதிக்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல வேலூர், விழுப்புரத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. எஸ்பி சிபி சக்கரவர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: