×

மாவட்டத்தில் 88 கி.மீ பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவு


கோவை, நவ. 13:  கோவையில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளில் இதுவரை 88 கிலோ மீட்டர்  நீள கழிவு நீர்  சேகரிப்பு குழாய் பதிக்கப்பட்டு, 5800 ஆள் நுழை குழிகள் அமைத்தல் பணி  நிறைவடைந்துள்ளது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் முனைவர் மகேஷ்வரன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளை முனைவர் மகேஷ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளான குறிச்சி மற்றும் குனியமுத்தூர் வார்டு 87 முதல் 100 வரை உள்ள பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் ரூ.591.14 கோடியிலும், குடிநீர் திட்டப் பணிகள் ரூ.202.30 கோடியிலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டங்கள் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளின் 14 வார்டுகள் பயன்பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டத்தின் சிறப்பு அம்சமாக அனைத்து கழிவு நீரேற்று நிலையங்களிலும் முதன் முறையாக துர்நாற்றம் அகற்றும் கருவி பொருத்தப்பட உள்ளது. மேலும் கழிவுநீர் சேகரிக்கும் குழாய்கள், சாலையில் தோண்டி பதிக்கப்பட்டவுடன், குழிகள் மூடப்பட்டு, சீரான இடைவெளியில் சாலை பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்து சாலைகள் சீர்செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் திட்டப்பணிகளுக்காக, இப்பகுதிகளில் 18 புதிய குடிநீர் மேல்நிலை தொட்டிகளும், 2 குடிநீர் சமநிலை தொட்டிகளும், குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.  பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை நிர்ணயிக்கபட்ட காலத்திற்குள் முடிப்பதற்காகவும், செயலாக்கத்தின்போது பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைப்பதற்காகவும், வீடுகள் அதிகமாக உள்ள சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளிலும், இரவு நேரங்களில் பணிகளை துவக்கி காலையில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.   பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளில் இதுவரை 88 கிலோ மீட்டர்  நீள கழிவு நீர் சேகரிப்பு குழாய் பதிக்கப்பட்டு, 5800 ஆள் நுழை குழிகள் அமைத்தல் பணி நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட உள்ளது.

குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்தின் கீழ், குனியமுத்தூர் அன்பு நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி பணிகள் 80 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.  இவ்வாறு முனைவர் மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.  மேலும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையம், மருத்துவ வசதிகள், பணியிட பாதுகாப்பு கருவிகள் அறை, தர பரிசோதனை கூடம் செங்கல் மற்றும்  கான்கிரீட் ஆழ்நுழை குழிகள், பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள  அறைகள் ஆகியவற்றையும்  அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வுகள்  மேற்கொண்டார்.

Tags : district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...