கோவை, நவ. 13: கோவை அரசு மருத்துவமனையில் 55 வயது பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்த 2 கிலோ அளவிலான புற்றுநோய் கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரம்மாள்(55). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில், அவரின் இடது பக்க சிறுநீரகத்தில் 24 செ.மீ. அளவில் சுமார் 2 கிலோ அளவிலான புற்றுநோய் கட்டி இருந்தது தெரியவந்தது. ரத்த குழாய்க்குள் பரவி இருந்தது. அறுவை சிகிச்சையின் மூலம் கட்டியுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுநீரகத்தை சிறுநீரக அறுவை சிகிச்சை துறை மருத்துவர் குழுவினர் அகற்றினர். தற்போது, வீரம்மாள் நல்ல நிலையில் இருக்கிறார். இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் நேற்று கூறியதாவது: வீரம்மாள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வயிற்று வலியுடன் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது சிறுநீரகத்தில் 24 செ.மீ. அளவில் புற்றுநோய் கட்டி இருந்தது.