பவானி, நவ. 13: பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணை 105 அடியாக நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து, அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. வினாடிக்கு சுமார் 3,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கோபி, கவுந்தப்பாடி, அத்தாணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது.இதனால், பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டுக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி 9,005 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் போக உபரிநீர் அனைத்தும் பிரதான அணைக்கட்டு மற்றும் முருகன் அணைக்கட்டு வழியாக பவானி ஆற்றில் சென்று காவிரியாற்றில் கலந்து வருகிறது.