வி.கே.புரம், நவ. 13: சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புலவன்பட்டி மூர்த்தி சுவாமி கோயில் தெருவை அடிக்கடி மழைநீர் சூழ்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வி.கே.புரம் அருகே சிவந்திபுரம் ஊராட்சிக்குட்பட்ட புலவன்பட்டி மூர்த்தி சுவாமி கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வீடுகளில் உள்ள கழிவுநீர், மழைநீர் வெளியேற கழிவுநீர் கால்வாய் இல்லாததால் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இத்தெருவிலுள்ள மக்கள் மழை காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வரமுடிவதில்லை. இந்நிலையில் வி.கே.புரம் மற்றும் சிவந்திபுரம் பகுதியில் கடந்த வாரம் மழையால் புலவன்பட்டி மூர்த்தி சுவாமி கோயில் தெருவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வீட்டிற்குள் மழைநீர் புகும் அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்தது.