தூத்துக்குடி, நவ.13.தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வி.இ.ரோடு பகுதி வழியாக ஒரு பைக்கில் வந்த இருவரை போலீசார் மறித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் 2 பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டைச் சேர்ந்த ஜோதிவேல்(45), கணேசபுரத்தைச் சேர்ந்த குணசேகரன்(50) என்பதும், இவர்கள் தூத்துக்குடியில் பைக் ஒர்க்ஷாப் நடத்தி வந்ததும்,
அவர்கள் தாங்கள் திருடும் பைக்குகளை ஒர்க்ஷாப்பிற்கு கொண்டு வந்து பாகங்களை மாற்றி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் ஓட்டி வந்த பைக்கை ஆய்வு செய்தபோது அது கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன ராஜகோபால்நகரை சேர்ந்த பூ கட்டும் தொழிலாளி சேகரின் பைக் என்பது தெரியவந்தது. இதனைத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.