சாத்தான்குளம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல்

சாத்தான்குளம், நவ.13: மைனர் பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுபுகுந்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். சாத்தான்குளம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பத்திரகாளி மகன் சிவா(24). ேஜசிபி டிரைவராக உள்ளார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் ஊர் பெரியவர்கள் சிவாவை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிவா, சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த சிறுமியின் தாயிடம் அவதூறாக பேசியதுடன் உன்னையும், கணவரையும் கொலை செய்து மகளை கடத்தி சென்று விடுவதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ பால கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.

Related Stories: