தூத்துக்குடியில் சிறுதானியங்கள் திட்ட விளக்க பிரசார ஊர்தி

தூத்துக்குடி, நவ. 13: தூத்துக்குடியில் சத்துமிகு சிறுதானியங்கள் திட்ட விளக்க பிரசார ஊர்தியை கலெக்டர் சந்தீப்நந்தூரி துவக்கிவைத்தார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில், வேளாண் துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சத்துமிகு சிறுதானியங்கள் திட்ட விளக்க பிரசார ஊர்தி துவக்க விழா நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப். 10ம்தேதி முதல் சோளம், கம்பு, ராகி, திணை, வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, கோட்டு (மரகோதுமை) மற்றும் ராஜ்கிரா (விதை கீரை) போன்ற சத்துமிக்க தானியங்களை சத்துமிகு சிறுதானியங்கள் என அறிவித்துள்ளது. சத்துமிகு சிறுதானியங்கள் நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கவையாக விளங்குகிறது.

மேலும், சிறுதானியங்கள் சர்க்கரை நோய் எதிர்ப்பு தன்மையுடையது. தூத்துக்குடி மாவட்டம் 82 சதவீதம் மானாவாரி சாகுபடி செய்யும் மாவட்டமாகும், இங்கு மானாவாரி வேளாண்மை மற்றும் மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் தானியங்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. மேலும், நமது மாவட்டத்தில் பொதுவாக சோளம் 11100 எக்டர், கம்பு 10200 எக்டர் மற்றும் குதிரைவரலி 200 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. நம் மாவட்ட விவசாயிகளுக்கு சத்துமிகு சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார ஊர்தி துவக்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசார ஊர்தி மூலம், கயத்தாறு, புதூர், ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு வேளாண்மைத்துறை அலுவலர்கள் சென்று சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவர். எனவே, விவசாயிகள் இதை பயன்படுத்தி அதிக மகசூல் செய்து, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்’’ என்றார். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், முன்னிலை வகித்தார். இதில் வேளாண் இணை இயக்குநர் சிர் கனகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) தமிழ்மலர், உதவி இயக்குநர்கள் நாகராஜன் (கயத்தாறு), முருகப்பன் (புதூர்), பூவனன் (விளாத்திக்குளம்), சரவணன் (ஓட்டப்பிடாரம்) மற்றும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: