* தரமற்ற பைப்புகளே காரணம் * பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி 12 மண்டலத்துக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது, பல இடங்களில் இதற்கான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி ஆறாக ஓடுகின்றன.இந்நிலையில், ஆதம்பாக்கம் கருணீகர் தெரு வழியாகச் செல்லும் பாதாள சாக்கடை குழாயில், கடந்த சில நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் கழிவுநீர் வெளியேறி ஆறாக ஓடி துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து, மண்டல கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், இந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக, 300 கடைகளில் பல கடைகளை வியாபாரிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை பள்ளத்தை தோண்டுவதும் மூடுவதும் வாடிக்கை ஆகிவிட்டது. தரமற்ற குழாய்கள் பாதிக்கப்படுவதால் இதுபோன்று அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண பகுதி முழுவதும் தரமான பைப்புகள் அமைக்க அதிகாரிகள் முன் வரவேண்டும் என்பது அப்பகுதி வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.