×

எனது மகனின் நண்பர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்

நாகர்கோவில், நவ. 12: மார்த்தாண்டம் அருகே உள்ள பிலாவிளை குளக்கச்சி பகுதியை சேர்ந்த மஞ்சு, தனது கணவர் அழகேசன், மகள் ஆகியோருடன் வந்து நேற்று எஸ்பியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். எனது மகன் ஜினீஸ் 11ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 27ம் தேதி காலை 9 மணிக்கு நண்பர்களுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றான். அவனது நண்பர்களை பற்றி விசாரித்தபோது அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் என கூறினார்கள். அவர்கள் எனது மகனை பல இடங்களுக்கும் அழைத்து சென்றுள்ளனர். மேலும் எனது மகனுக்கு போதை பொருட்களை கொடுத்துள்ளனர். எனது மகனை அழைத்துச்சென்ற அன்றைய தினம் எடுத்த இரண்டு புகைப்படங்கள் எனக்கு கிடைத்தது. அதில் ஒரு புகைப்படத்தில் என்னுடைய மகனையும் சேர்த்து 6 நபர்கள் இருந்தனர். பின்பு 2வது புகைப்படத்தில் என்னுடைய மகன் இல்லை. ஆனால் என்னுடைய மகனுடன் சேர்ந்து 6 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது, சுமார் 2 மணி அளவில் பெரிய அலை வந்து குளித்து கொண்டிருந்த ஜெனீஸ், மற்றும் விஜய் ஆகியோரை இழுத்து சென்றதாகவும், மீனவர்கள் விஜய்யை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாகவும் கூறினர். எனது மகனை தேடியும் கிடைக்கவில்லை என கூறப்பட்டது. இது தொடர்பாக குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுவரை எனது மகனின்  உடல் கிடைக்கவில்லை. எனது மகனை அழைத்துச்சென்ற நண்பர்கள் போதையில் ஏதாவது செய்தார்களா என்ற சந்தேகம் உள்ளது. எனவே எனது மகனின் நண்பர்களை போலீசார் விசாரணை நடத்தினால் எனது மகன் உயிரோடு உள்ளாரா இல்லை இறந்து விட்டாரா என்ற உண்மை தெரியவரும். எனவே எனது மகனின் நண்பர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து எனது மகனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்ெகாள்கிறேன்.

Tags : friends ,
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...