புதுக்கடை, நவ. 12: உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட சாங்கையில் பால்மா மக்கள் அமைப்புகளின் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல் பிரார்த்தனை செய்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பால்மா நெறிமுறையாளர் அன்பையன் தலைமை வகித்தார். பால்மா சுயஉதவி குழு தலைவர் ஜெயக்குமாரி முன்னிலை வகித்தார். செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் அறிக்கை வாசித்தார். புதிய அலுவலக கட்டிடத்தை வசந்தகுமார் எம்.பி திறந்து வைத்தார். அவர் பேசியதாவது:பனை மரத்தின் அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன்படுகிறது. இன்று அதை இழந்து விட்டோம். இது போன்ற அமைப்புகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியிருந்தால், இழப்புகள் ஏற்பட்டிருக்காது. பனையேறிகளை சமுதாயத்தில் ஒடுக்கி வந்த நிலை காணப்பட்டது. இன்று பனை பொருட்களின் நன்மை வெளிவர துவங்கி விட்டது. 5 நட்சத்திர ஓட்டல்களில் பனை பொருட்கள் விற்பனைக்கு வந்து விட்டது. பனை மரம் உயர்ந்தது என்ற எண்ணம் மக்களிடம் வரவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்..
நிகழ்ச்சியில் விழா மலரை வசந்தகுமார் எம்.பி வெளியிட இந்து மகா சபா தலைவர் பாலசுப்ரமணியம் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து இளம் பொறியாளர் ஒருவர் பனைஏறும் தொழில் செய்வதை பாராட்டி கவுரவிக்கப்பட்டார். பால்மா இயக்குனர் செல்லன், பனை ஆய்வாளர் அருட்பணி. காட்சன் சாமுவேல், பிரின்ஸ் எம்.எல்.ஏ, உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், சட்ட ஆலோசகர் சுரேஷ், பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனம் நிர்வாகி முனைவர் லாரன்ஸ், பால்மா இயக்குனர் சிவகுமார், மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல் - அமீன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இயக்குனர் செல்வன் நன்றி கூறினார்.