வேலூர், நவ.12: வேலூர் மண்டிவீதியில் சரக்கு வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தடை விதித்துள்ள நிலையில் அதை மீறும் வகையில் சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்கு ஏற்றி இறக்கும் பணி நடப்பதால் நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.வேலூர் மண்டி வீதியில் (கிருபானந்த வாரியார் சாலை) சரக்கு வாகனங்கள், ஆட்டோ, கார், லாரி என்று அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே பல இடங்களில் நிறுத்தி சரக்கு ஏற்றி, இறக்குவதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல் வியாபாரிகளும் சாலையிலேயே கடைகளை வைத்து ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் அவ்வழியாக நடந்து செல்லக்கூட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். எனவே, தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள், ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து போலீசார் மண்டிவீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இடதுபுறம் மட்டும் இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும். வலதுபுறமாக நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி சரக்கு வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் மண்டிவீதியில் வாகனங்களை நிறுத்தி சரக்குகளை இறக்கவும், ஏற்றவும் தடை செய்யப்படும் என்று போலீசார் வியாபாரிகளுக்கு துண்டுபிரசுரம் வழங்கினர்.