கடையநல்லூர், நவ. 12: நெல்லை மாவட்டம், கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மைதீன்பிச்சை மனைவி ஆயிஷாள் பீவி என்ற மல்லிகா (36), மகள் ஆஷிகா (15), அதே பகுதியைச் சேர்ந்த தீன்ஒலி மகள் கன்சாள் மஹரிபா (40) ஆகியோர் கடந்த 9ம் தேதி திரிகூடபுரத்திலிருந்து சொக்கம்பட்டிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது கடையநல்லூரிலிருந்து புளியங்குடி நோக்கி சென்ற ராஜபாளையம் பட்டாலியன் போலீஸ் பாதுகாப்பு ரோந்து பேருந்து எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திரிகூடபுரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை இடித்ததை தொடர்ந்து பேருந்தின் டயர் வெடித்து அங்கு நின்ற பயணிகள் மீது மோதி மரக்கிளையின் உரசியவாறு நின்றது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து போலீஸ் ரோந்து பேருந்தில் படுகாயமடைந்து சிக்கியிருந்த ஆயிஷாள் பீவி, ஆஷிகா மற்றும் கன்சாள் மஹரிபாவை மீட்டு கிசிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு ஆயிஷாள் பீவி பரிதாபமாக உயிரிழந்தார்.