சுரண்டை, நவ.12: சுரண்டையில் மின்சாரம் தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு நாடார் சங்கங்கள் சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்டது. மேலும் மின்சாரம் தாக்கி பலியான சரவணன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி காமராஜர் பிறந்த நாள் விழாவிற்காக கட் அவுட் வைத்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சரவணன் (30) மற்றும் மணிகண்டன் (25) ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதில் சரவணனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மின்சாரம்தாக்கி பலியானார்கள் குடும்பத்திற்கு நாடார் மஹாஜன சங்கம் மற்றும் நாடார் அமைப்புகள் சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணநிதி வழங்கப்பட்டது. நிதியை சமத்துவ மக்கள் கட்சி முதன்மை பொது செயலாளரும் தொழிலதிபருமான எஸ்.வி.கணேசன் மற்றும் நாடார் மகாஜன சங்க துணை தலைவர் மதன் சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.