திருவேங்கடம், நவ.12: திருவேங்கடம் அருகே பைக்கில் சென்ற தந்தை, மகனை கத்திமுனையில் மிரட்டி நகைகளை பறித்து சென்ற பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். தொடர் சம்பவத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கழுகுமலை முத்தையாசேர்வை தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் செந்தில்குமார்(33). இவர் கழுகுமலையில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் தந்தை, மகன் இருவரும் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நேற்றுமாலை திருவேங்கடம் அருகே நடுவப்பட்டி-கழுகுமலை சாலையில் வந்து கொண்டிருந்தபோது பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் 3பேர் திடீரென வழிமறித்தனர். பின்னர் அண்ணாமலை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தந்தை, மகன் இருவர்களிடம் அவர்கள் அணிந்திருந்த 2 செயின் மற்றும் பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துச்
சென்றனர்.