நெல்லை, நவ. 12: நெல்லை மாவட்டத்தில் சிறிய ஜவுளிப் பூங்கா அமைக்க முதலீட்டாளர்களுக்கு ரூ.2.50 கோடி வரை மானியம் வழங்கப்படும் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் சிறிய ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடர்பாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆலோசனைக் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: சிறிய அளவிலான ஜவுளிபூங்காக்கள் அமைக்க உட்கட்டமைப்புக்கான செலவினத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இதில் எது குறைவோ அதை மாநில அரசு மானியமாக வழங்கும் என்று முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். ஒவ்வொரு சிறிய ஜவுளிப் பூங்காவும் ஒரு சிறப்பு நோக்க முகமையை பதிவு செய்திருக்க வேண்டும். இந்த ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். நிலமானது சிறப்பு நோக்க முகமை பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும்.