நாசரேத், நவ. 12: கடையனோடை பகுதியில் பராமரிப்பின்றி உருக்குலைந்த நாசரேத் - ஏரல் சாலை விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். நாசரேத் - ஏரல் தார் சாலை முறையானபராமரிப்பின்றி உருக்குலைந்துள்ளது. குறிப்பாக நாசரேத் - ஏரல் இடையே குளத்துக்குடியிருப்பு, கடையனோடை, தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையால் சாலை பகுதி மேலும் அரிக்கப்பட்டு குண்டும், குழியுமாக மாறிவிட்டன. இதனால் இவ்வழியாக தினமும் இயக்கப்படும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பயணிப்போர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பல்வேறு பணிநிமித்தமாக செல்லும் பொதுமக்கள், சைக்கிள்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் செல்வோர், சாலையில் உருவான ராட்சத பள்ளங்களில் விழுந்து விபத்துக்கு உள்ளாகும் அவலம் தொடர்கிறது. எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உருக்குலைந்த இச்சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விரைவில் சீரமைக்க முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர்.