தூத்துக்குடி, நவ. 12: தூத்துக்குடி பாரதிநகர், சின்னக்கண்ணுபுரத்தில் தேங்கிநிற்கும் மழைநீரால் அவதிப்படும் மக்கள், விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் பாரதி நகர் நற்பணி மன்றத்தினர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டரிடம் அளித்துள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் 3வது வார்டு பகுதிகளான மீளவிட்டான், சின்னக்கண்ணுபுரம், பாரதிநகர் கிழக்கு, மேற்கு பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் சாலைகள் மழைநீரில் மூழ்கி கிடக்கிறது. மீளவிட்டான் சாலையை 2 அடிக்கு உயர்த்தியதால் தெருக்கள் 3அடிக்கு மேல் பள்ளமானது. எனவே மழைநீரை அப்புறப்படுத்தி, இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் சாலைகளை சீரமைக்க வேண்டும், இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் தெருவில் தேங்கிநிற்கும் மழைநீரை அகற்றக் கோரி மாநகராட்சி 3வது வார்டு கோக்கூர் பாக்கியலட்சுமி நகரை சேர்ந்த மக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர். இதேபோல் கழுகுமலை பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு விவரம்: கழுகுமலை பகுதியில் 25 ஆண்டுகளாக நாங்கள் வசித்து வரும் பகுதியான ஆறுமுகாநகரில் அடிப்படை வசதிகளே அமைத்து தரப்படவில்லை. மேலும் சாலைகள், கழிவு நீர் கால்வாய்கள் உள்ளிட்டவை அமைத்து தர மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.