மிலாது நபி நாளில் மதுவிற்ற 11 பேர் கைது 950 பாட்டில் பறிமுதல்

சேலம், நவ.12: சேலம் மாநகரில் மிலாது நபி நாளில் சந்து கடைகளில் மதுவிற்ற 11 பேரை போலீசார் கைது செய்து, 950 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  மிலாது நபியையொட்டி நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஆனால், ஆங்காங்கே சந்து கடைகளில் மது விற்பனை படுஜோராக நடந்தது. சேலம் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில், திருட்டு தனமாக டாஸ்மாக் மதுவகைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். இதுதொடர்பான தகவல்களின் பேரில் மதுவிலக்கு போலீசாரும், அந்தந்த ஸ்டேஷன் போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், சேலம் டவுன் பகுதியில் எஸ்ஐ மாணிக்கம் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், சுந்தர் (44) என்பவர் 133 மது பாட்டிகளுடனும், மணிகண்டன் (39) என்பவர் 127 மதுபாட்டில்களுடனும், வாலிபர் பார்த்திபன் (21) 112 பாட்டில்களுடனும் ன் சிக்கினர். இந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், கன்னங்குறிச்சி சின்னமாரியம்மன் கோயில் தெருவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அதில், குமரேசன் (44) என்பவர் தனது வீட்டின் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அவரை மடக்கி பிடித்து கைது செய்து, 480 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி குமரேசனை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அன்னதானப்பட்டி, பள்ளப்பட்டி, சூரமங்கலம் பகுதிகளில் 7 பேர் மதுவிற்று சிக்கினர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். ஒட்டுமொத்தமாக நேற்று முன்தினம் ஒரேநாளில் 11 பேரை கைது செய்து, 950 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: