அயோத்தியாப்பட்டணத்தில் ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து பாதிப்பு

அயோத்தியாப்பட்டணம், நவ.12:  அயோத்தியாப்பட்டணத்தில். ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து அரூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில், தடுப்பு கம்பி நேற்று மாலை திடீரென பழுதடைந்தது. இதையடுத்து, அதனை தனியாக கழற்றி சரிசெய்யும் பணி நடைபெற்றது. இதனால், சேலத்தில் இருந்து விருதாசலம் செல்லும் பயணிகள் ரயில் அப்பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டது. மேலும், அந்த வழியாக வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தர்மபுரி மற்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலானோர், இந்த வழித்தடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், எப்போதும் போக்குவரத்து காணப்படும். ரயில் போக்குவரத்திற்காக அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுகிறது. மேலும், தடுப்பு கம்பி வலுவிழந்து அடிக்கடி பழுதடைந்து உடைந்து விழுகிறது. இதனால், வாகனங்களில் செல்வோர் நீண்ட நேரம் காத்து கிடக்கும் அவல நிலை உள்ளது. மேலும், விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. எனவே, அடிக்கடி பழுதாகும் ரயில்வே கேட் தடுப்பு கம்பியை மாற்ற வேண்டும். மேலும், சீரான போக்குவரத்துக்கு வசதியாக மேம்பாலம் கட்ட வேண்டும்,’ என்றனர்.

Related Stories: