குமாரபாளையம், நவ.12: குமாரபாளையத்தில் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த பழைய தபால் அலுவலகம், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இடமாற்றம் செய்யப்பட்டது. குமாரபாளையம் ஜேகேகே வீதியில் கடந்த 40 ஆண்டுகளாக, பழைய தபால் அலுவலகம் செயல்பட்டு வந்தது. நீண்டகாலமாக இயங்கிய இந்த அலுவலக கட்டிடம் பழுதாகி, மழைக்காலங்களில் நீர் கசிவதால் ஆவணங்கள் நனைந்து வீணானது. இதையடுத்து, பைபாஸ் சாலையில் எதிர்மேட்டில் இயங்கி வந்த கிளை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்ய, கடந்த 2 மாதங்களுக்கு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தபால்துறை கொடுக்கும் குறைவான வாடகைக்கு, நகரின் மத்தியில் கட்டிடம் கிடைக்கவில்லை. இதனால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தொலைபேசி அலுவலகத்திற்கு மாற்றலாமென கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை சென்னையில் உள்ள தபால் துறை அதிகாரிகள் அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது தொடர் மழை பெய்ததால் தபால் பணிகள் பாதிக்கப்பட்டது. ஆவணங்கள் நனைந்து வீணாவதை அறிந்த அதிகாரிகள், ஓசைப்படாமல் பழைய அலுவலகத்தை மூடிவிட்டு, எதிர்மேட்டில் உள்ள கிளை அலுவலகத்திற்கு அலுவலகத்தை மாற்றி விட்டனர்