ஓசூர், நவ.12: ஓசூரில், மாவட்ட காது கேளாதோர் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, காது கேளாத மாணவர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஓசூர் டைட்டான் டவுன்ஷிப்பில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்ட காது கேளாதோர் அறக்கட்டளை அரங்கத்தில், காது கேளாத மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஓசூர், அரியலூர், திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களிலிருந்து சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். இதில் கோலப்போட்டி, ஓவியப்போட்டி, மௌன நாடகம், மேற்கத்திய நடனங்கள், கைவினைப்பொருட்கள் செய்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. டைட்டான் தொழிற்சாலை முன்னாள் நிர்வாக இயக்குநர் பாஸ்கர்பட், மதர் இண்டியா பாரம் இயக்குநர் துரைராஜ் ஆகியோர், மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். காது கேளாதோர் சங்க அறக்கட்டளை தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான சுரேஷ்பாபு, நிர்வாகிகள் ஜெய்சங்கர், மோகன், பலராமன், ஜீவானந்தம், கணேசன், செந்தில்குமார் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.