ஈரோடு, நவ. 12: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இக் கூட்டத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தைவள்ளுவன் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை தொடர்பாக அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை சமூக விரோதிகள் சிலர் இழிவுப்படுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதேபோன்று டாக்டர் அம்பேத்கர் சிலை வைக்க அரசை வலியுறுத்தி புளியம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். இதற்கும் அனுமதி மறுத்தனர். பவானியில் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராகவும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் கடந்த செப்.4ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம்.