ஈரோடு, நவ. 12: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பூ வியாபாரிகள் ஈரோடு-நாகூர் வரை சைக்கிள் பயணம் சென்றனர். ஈரோட்டில் உள்ள பூ வியாபாரிகள் மத நல்லிணக்கம் மற்றும் உலக அமைதியை நிலைக்க வேண்டி கடந்த 16 ஆண்டுகளாக ஈரோடு-நாகூர் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், நடப்பாண்டு 17வது ஆண்டாக தங்களது சைக்கிள் பயணத்தை நேற்று துவங்கினர். இதில், சையது முஸ்தபா தலைமையில் 7 பேர் ஈரோடு ஸ்டேட் பேங்க் புது வீதியில் இருந்து சைக்கிளில் நாகூர் வரை தங்களது பயணத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து சையது முஸ்தபா கூறுகையில்,`ஈரோடு, கொடுமுடி, கரூர், குளித்தலை, திருச்சி, சமயபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி வழியாக நாகூர் வரை 320 கி.மீ. தூரம் வரை சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளோம். தினமும் சுமார் 100 கி.மீ. வரை பயணிப்போம். வியாழக்கிழமை நாகூர் சென்றடைவோம். எங்களது நோக்கமே மத நல்லிணக்கமும், உலக மக்கள் அமைதியும் தான். இதை வலியுறுத்தி தான் 17வது ஆண்டாக நேற்று எங்களது பயணத்தை துவக்கி உள்ளோம்’ என்றார்.